இந்தியா-அமெரிக்கா இடையே வாஷிங்டனில் நடந்த 2வது ‘டூ பிளஸ் டூ’ பேச்சுவார்த்தையில், இருதரப்பு உறவுகளையும், ஒத்துழைப்பையும் மேலும் விரிவுபடுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘‘ராணுவத்துறையில் இரு நாடுகளுடம் அதிக ஒத்துழைப்புடன் செயல்பட நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்’’ என்றார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், ‘‘நிதி நடவடிக்கை குழு, நீதித்துறை அகாடமி, தீவிரவாதத்துக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பளிக்கும் நடைமுறைகள், குற்றவியல் சட்ட நடைமுறைகள் ஆகியவற்றில் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது’’ என்றார்.
அமெரிக்க குடியுரிமை கொள்கைகளில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடுமையான கெடுபிடிகளை பின்பற்றுகிறது. வெளிநாட்டு ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா விண்ணப்பங்கள் அதிகளவில் நிராகரிக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்தும் டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையில் பேசப்பட்டது.