புதுடெல்லி:-
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.50,000 வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் தொகையை எப்படிப் பெறுவது?
இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 4 லட்சத்து 47 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இதை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு நிதி உதவி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதில் மத்திய அரசு தயக்கம் காட்டியதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது.
அதில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த பணத்தை மாநில அரசுகள் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், இனிவரும் காலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 இழப்பீட்டுத் தொகையை வழங்கலாம் என்று தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்:-
கொரோனா சிகிச்சைப் பணி, தடுப்புப் பணி, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா 1,2 அலை காலங்களில் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் மறு அறிவிப்பு வரும்வரை கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
கொரோனா தொற்று உறுதியான அல்லது கொரோனா சிகிச்சை தொடங்கப்பட்ட 30 நாள்களுக்குள் மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தால் அவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவராகக் கருதப்படுவார்கள்.
மேலும், 30 நாள்களுக்குப் பிறகும் சிகிச்சையிலிருந்து உயிரிழப்பவர்களும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களாகக் கணக்கிடப்படுவர்.
ஒருவேளை, ஒருவர் 30 நாள்களுக்கும் மேலாக கொரோனா சிகிச்சையிலிருக்கும்போது இறந்து அவரது டெஸ்ட் ரிசல்ட்டில் கொரோனா நெகட்டிவ் என வந்து இறப்புச் சான்றிதழிலும் கொரோனா நெகட்டிவ் எனக் குறிப்பிடப்பட்டு, கொரோனாவால் இறக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தாலும் மேற்சொன்ன விளக்கப்படி அவர்களும் நிவாரணம் பெறலாம்.
இந்த நிவாரணத் தொகை தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்த 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் மட்டுமே நிவாரணத்தொகை செலுத்தப்பட வேண்டும்.
எப்படி வாங்குவது:-
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இறப்புச் சான்றிதழ் உட்பட தேவையான ஆவணங்களோடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
நிவாரணம் வழங்கும் பணியை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அல்லது மாவட்ட பேரிடர் மேலாண்மை நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும்.
கொரோனாவால் உயிரிழந்தார் என்று சான்றிதழ் வாங்குவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அந்தச் சிக்கலைத் தீர்க்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பிரத்யேகக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இக்குழுவில், கூடுதல் மாவட்ட ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி, மருத்துவக் கல்லூரியின் துறைத் தலைவர் (மருத்துவக் கல்லூரி இருக்கும் மாவட்டத்தில் மட்டும்) மேலும் ஒரு துறை சார் நிபுணர் இடம்பெறுவார்கள்.
இந்தக் குழுவிடம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் முறையிடலாம். ஒருவேளை இந்தக் குழு அந்த குடுப்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்குவதை மாறுபட்டால், அதற்கான காரணம் தெளிவுபடக் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.