டெல்லியில் 17 வயது மாணவி மீது ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட்டை வீசி மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவரது முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மாணவி மீது ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இதை சகித்துக்கொள்ள முடியாது. குற்றவாளிகளுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் டெல்லியில் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம் எனவும் அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.