கொச்சி:-
கேரள மாநிலம் கொச்சியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. திருச்சூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷாஜி கோடன்கண்டத் (Shaji J Kodankandath) என்பவர் அண்மையில் இந்த விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் டீ குடித்தார். அதனைத் தொடர்ந்து டீயின் விலை ரூ.100 என கடைக்காரர் கூறியதும் ஷாஜி அதைக்கேட்டு ஒரு கப்பில் சிறிது வெந்நீரும் டீ பாக்கெட் ஒன்றும் போட்டு தருவதற்கு 100 ரூபாயா கடும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.
அதனைத் தொடர்ந்து ஷாஜி தனது புகாரை பிரதமர் நரேந்திர மோடிக்கு இமெயில் மூலம் அனுப்பினார். அந்தப் புகாரின் அடிப்படையில் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க பிரதமர் முன்வந்தார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் காபி, டீ மற்றும் தின்பண்டங்களின் விலை பன்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.100 க்கு விற்கப்பட்டு வந்த டீ ரூ.15-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் காபி ரூ. 20-க்கும், பருப்பு வடை, மெதுவடை உள்ளிட்டவை ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஷாஜி:-
பிரதமர் மோடி இணையதளத்தை 2 நாட்களுக்கு முன்னர்பார்த்தேன். அதில், கொச்சி விமான நிலைய மூத்த மேலாளர் ஜோசப் பீட்டர் கையெழுத்திட்டு வெளியிட்டிருந்த கடிதத்தைப் பார்த்தேன். அதில், கொச்சி விமான நிலையத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. டீ, காபி உட்பட பலபொருட்களின் விலை ரூ.15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் எம்ஆர்பி விலைக்கு விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கொச்சி மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் இதே நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நீட்டிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.