மராட்டியத்தின் நாக்பூர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் சத்தீஷ்காரின் தோங்கர்கார் பகுதியில் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகின.
18239 என்ற எண் கொண்ட ஷிவ்நாத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆனது, கோண்டியா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இத்வாரி ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றபோது , சத்தீஷ்காரின் தோங்கர்கார் பகுதியில் ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. எனினும், இதனால் ஒருவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தென்கிழக்கு மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது. ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதனால் பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் என ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ரெயிலை மீண்டும் இயக்குவதற்காக தொழில் நுட்ப குழுவும், மருத்துவ குழு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. 2 மணிநேர பணிக்கு பின்பு, தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் தனியாக கொண்டு செல்லப்பட்டு அதில் இருந்த பயணிகள் படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு இடம் மாற்றப்பட்டனர். அதன்பின் ரெயில் புறப்பட்டு சென்றது.