அகமதாபாத்:-
பானிபூரி விரும்பாதவர் பாரதத்தில் உண்டோ?? பானி பூரியின் பூர்வீகம் வட இந்தியா, குறிப்பாக தெற்கு பீஹார் என்கிறார்கள். சிலர் வாரணாசி, வங்கதேசம் என்கிறனர். பானி பூரியின் பின்புலம் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அதன் அசாத்திய சுவையை நமது நாக்கு நன்கறியும். தெருவோரக் கடைகளில் அதிகம் விற்பனை செய்யப்படும் பானி பூரியை சிறுவர்கள் முதல் முதியோர் உண்டு மகிழ்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் சாலையோரம் அதிகம் விற்கப்படும் பானிபூரியை உண்ண முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதன் காரணமாக பலரும், யூடியூப் பார்த்து வீட்டில் தயாரித்து உண்ண ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில், கொரோனா பயமின்றி பானிபூரி சாப்பிட குஜராத் மாநிலம் பானஸ்கந்தா (Banaskantha) மாவட்டத்தை சேர்ந்த பாரத்பாய் விகாபாய் பிரஜாபதி என்ற இளைஞர் ‘பானி பூரி ஏடிஎம்’-ஐ தயாரித்துள்ளார்.
இதில், ரூ.20 நோட்டை உள்ளே செலுத்தினால் கன்வேயர் பெல்டில் பூரியுடன் பானி, உருளைக்கிழங்கு சேர்த்த கலவை, ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது. இதனை அப்படியே எடுத்து சாப்பிடலாம்.
கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் பயமின்றி பானி பூரி சாப்பிடவும் இந்த மிஷினை, பிரஜாபதி வடிவமைத்துள்ளார். இதை வடிவமைக்க கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகி உள்ளது.
இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த பானி பூரி ஏடிஎம் தொடர்பான வீடியோவை அசாம் கூடுதல் டிஜிபி (Additional Director General of Police (ADGP)) ஹர்தி சிங் (Hardi Singh) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்:-
பிரஜாபதியின் இந்த கண்டுபிடிப்பும், அவரது மிஷின் எவ்வாறு செயல்படுகிறது என்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேநேரம் வளர்ந்து வரும் இன்றைய தொழில்நுட்பம் மனித வேலைகளை பாதியாக குறைத்து விட்டது. நமக்கு தேவையான உணவுகளை தயாரிப்பதற்கே இயந்திரங்கள் வந்துவிட்ட பிறகு மனித ஆற்றல் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.