குஜராத்தில் பின்தங்கிய பிரிவினர்க்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கு, தொழிற்பயிற்சி அளிக்க சர்தார்தம் பவனை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார்தம் பவன் கட்டிடத்தை, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது இந்தத் திட்டத்தின் இரண்டாம் பகுதியாக 2000 மாணவிகள் தங்கும் விடுதிக்கான (கன்னியா சேத்ராலயா) பூமி பூஜையிலும் பங்கேற்றார். இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று குறிப்பிடப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக அமைக்கப்பட்டதாகும்.
இன்று திறக்கப்படும் விடுதி வசதி பல பெண்கள் முன்னுக்குவர உதவும் என்றார். நவீன கட்டிடம், பெண்கள் விடுதி மற்றும் நவீன நூலகம், இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்று அவர் கூறினார். தொழில்முனைவு மேம்பாட்டு மையம் குஜராத்தின் வலுவான வணிக அடையாளத்தை வளமாக்கும் மற்றும் சிவில் சர்வீஸ் மையம், சிவில், பாதுகாப்பு மற்றும் நீதித்துறை சேவைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டியாக புதிய திசையை அளிக்கும்.
உலக வரலாற்றில் செப்டம்பர் 11ம் தேதி, மனித இனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தினமாக அறியப்படுகிறது. ஆனால், இந்த தேதி, ஒட்டுமொத்த உலகத்துக்கும் அதிகம் கற்றுக்கொடுத்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, செப்டம்பர் 11, 1893 அன்று, சிகாகோவில் உலக மதங்களின் மாநாடு நடைபெற்றது. இந்த நாளில், சுவாமி விவேகானந்தர், அந்த உலக அரங்கில் நின்று இந்தியாவின் மனித மதிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 9/11 போன்ற துயரங்களுக்கு, இந்த மனிதாபிமான மதிப்பீடுகளின் மூலம் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது.
இன்று மற்றுமொரு சிறப்பு, இந்தியாவின் சிறந்த அறிஞர், தத்துவஞானி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ‘சுப்பிரமணிய பாரதியின்’ 100வது நினைவு தினம். சர்தார் சாஹிப் கண்ட ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தத்துவம், மகாகவி பாரதியின் தமிழ் எழுத்துக்களில் முழு தெய்வீகத்துடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. சுப்பிரமணிய பாரதி, சுவாமி விவேகானந்தரிடமிருந்து உத்வேகம் பெற்றார் மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் தாக்கத்தால் அவர் ஈர்க்கப்பட்டார். காசியில் வாழும்போது பாரதி தனது புதிய சிந்தனைகளுக்கும், ஆற்றலுக்கும் ஒரு புதிய திசையைக் கொடுத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், ‘சுப்பிரமணிய பாரதி’ பெயரில் ஒரு இருக்கை அமைக்கப்படும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கலைகள் புலத்தில் தமிழ்படிப்புகளுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கை அமைக்கப்படும். மனிதநேய ஒற்றுமை மற்றும் இந்திய ஒற்றுமை ஆகியவற்றுக்கு சுப்பிரமணிய பாரதியார் எப்போதும் சிறப்பு முக்கியத்துவம் அளித்தார். அவரது கொள்கைகள் இந்தியாவின் சிந்தனை மற்றும் தத்துவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும், என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சா.கற்பகவிக்னேஷ்வரன்