மும்பை:-
கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் இளம்பெண் நிர்பயா, கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடைய பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமாக சித்ரவதை செய்தது சிதைத்தது. அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
இந்நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு இதேபோன்ற கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.
மும்பையின் சகிநாகா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு 34-35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதப்பதாகவும், அவரை ஒருவர் தாக்குவதாகவும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு ராஜாவாடி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், அவரது பெண் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி மூலம் சிதைக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.
அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அந்த பெண் இன்று உயிரிழந்தார்.
இதனிடையே சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றிய போலீசார், அதில் ஆய்வு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய மோகன் சவுகான்(45) என்பவரை கைது செய்தனர்.
அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். செப்.,21 வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
டெம்போ வேனில் வைத்து அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இரும்பு ராடு கொண்டு அவரை தாக்கியதும், பிறப்புறுப்பை சேதப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
அந்த டெம்போ முழுவதும் ரத்தம் படிந்திருந்தது. தடயவியல் நிபுணர்கள் டெம்போவை ஆய்வு செய்தனர். நடந்த சம்பவம் குறித்து அந்தப்பெண்ணிடம் வாக்குமூலம் பெற காவல்துறையினர் காத்திருந்த நிலையில் அந்தப்பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே, இது வெட்கப்பட வேண்டிய சம்பவம். கடும் கண்டனத்திற்குரியது. மனித நேயத்திற்கு எதிரானது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் என்று கூறினார்.
தேசிய பெண்கள் ஆணையமும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உடனடியாக வழக்குப்பதிவு செய்யவும், விரைவாக விசாரணை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.