தன் நாட்டு குடிமக்கள் இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ளனர் என்ற விவரத்தை முதல் முறையாக வங்காளதேசம் வெளிப்படையாக அறிவித்துள்ளது. டாக்காவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வங்காளதேச எல்லை பாதுகாப்பு படை தலைவர் மேஜர் ஷாபின்புல் இஸ்லாம் இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக சுமார் 1000 வங்காளதேச நாட்டவர்கள், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவர்கள் இந்தியாவுக்கு செல்லும் போது அல்லது, இந்தியாவில் இருந்து திரும்பும் போது கைது செய்யப்பட்டவர்கள் எனவும், அவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளியுறவுக் கொள்கையில் ஆலோசகர் கவ்ஹர் ரைஸ்வி, கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது, அவர், இந்தியாவில், எங்கள் நாட்டவர்கள் சட்ட விரோதமாக தங்கியிருந்தால், அவர்களை திரும்ப அழைத்துக்கொள்வோம்” என்றார்.
அதேபோல், வங்காளதேசத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 96 இந்தியர்களின் பட்டியலை, இந்திய அரசிடம் வங்காளதேசம் ஒப்படைத்தது. அவர்களின் 62 பேர் எல்லை பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏனையோர் , வங்காளதேசத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.