முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையில் விசாரிப்பதற்காக 1999-ம் ஆண்டு, சிபிஐ தலைமையில் எம்டிஎம்ஏ என்ற விசாரணை அமைப்பு உருவாக்கப்பட்டது. 20ஆண்டுகளுக்கு மேலாக எம்டிஎம்ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், எம்எடிஎம்ஏவின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என பேரறிவாளன் கடந்த 2016-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
மனுவில், பெல்ட் வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கித் தந்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பெல்ட் வெடிகுண்டு எங்கிருந்து வந்தது என்பதே இதுவரை கண்டுபிடிக்கப்படாததை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். எனவே, எம்டிஎம்ஏ விசாரணை முடியும் வரை தனக்கு வழங்கப்பட்ட தண்டணையை நிறுத்தி வைக்கும்படி மனுவில் பேரறிவாளன் கோரியிருந்தார். சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள் முழுமையான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிபிஐ தரப்பில் விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் புதிததாக ஒன்றும் இல்லை என்றும் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்து வருவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரிடம், உங்களுக்கு என்ன நிவாரணம் வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவெடுத்து, அது தமிழக ஆளுநரிடம் அனுப்பப்பட்டதை பேரறிவாளன் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆளுநர் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய பேரறிவாளனின் வழக்கறிஞர், அந்த பரிந்துரை மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.