மதுரை:-
பக்ரீத் பண்டிகையையொட்டி மதுரையில் பிரியாணிக் கடை திறப்பு விழாவை முன்னிட்டு 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி என விளம்பரம் செய்ததால், விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களில் பிரியாணி விற்றுத் தீர்ந்தது.
மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த்- அக்ட்சயா தம்பதியர். இவர்கள், மதுரையில் சுகன்யா என்ற பெயரில் அசைவ ஓட்டல் நடத்துகின்றனர். இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி தங்களது ஓட்டலின் 3-வது கிளையைத் திறக்கத் திட்டமிட்டனர்.
கடை திறப்பு விழாவை முன்னிட்டு 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி என விளம்பரம் செய்ததால், 5 பைசா நாணயத்துடன் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டனர். இதனை எதி்ர்பார்க்காத கடை ஊழியர்கள் திகைத்தனர்.
5 பைசா கொண்டு வரும் 50 நபர்களுக்கு பிரியாணி வழங்க முடிவு செய்திருந்த அவர்கள், கூட்டம் அதிகமாக கூடியதால் கடையின் கதவுகளை அடைத்தனர். அங்கு அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமல் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து செல்லூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடை மூடப்பட்டதால் போலீசார் அங்கிருந்து அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.
இதனிடையே, கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு பிரியாணி விற்பனை செய்த அந்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.