சென்னை
அ.தி.மு.க. கட்சியின் சட்டத்திட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் வருகிற 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. கட்சியின் சட்டத்திட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3, 4-ந் தேதிகளில் நடந்தது.
ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனுக்களை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் தாக்கல் செய்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி பெயரில் முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என பலரும் வேட்புமனு அளித்தனர்.
அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை நடத்தும் தேர்தல் கமிஷனர்களான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வேட்புமனுக்களை பரிசீலித்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்களை தவிர மற்றவை நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு போட்டி ஏற்படாததால் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் உள்ளது. இதன் மூலம் அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவாக்கி உள்ளது.
தேர்தல் கமிஷனர்களான பொன்னையனும், பொள்ளாச்சி ஜெயராமனும் இன்று கூட்டாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.