தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரொக்கமாக செலுத்தும் போது கால தாமதம் ஆகிறது.இதனிடையே விடுமுறை தினங்களில் வாகனங்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதனை சரிசெய்யும் விதமாக மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தீர்மானித்தது. அதற்காக ‘பாஸ்டேக்’ வில்லைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களையும் வாகனத்தின் விவரங்களையும் பாஸ்டேக் வில்லைகளை பெற்று ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
அதை தங்களது வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் இதற்கான தனி பாதைகளில் காத்திருக்காமல் செல்லலாம். இதற்கான கட்டணம் சுங்க சாவடியில் உள்ள மின்னணு கருவி மூலம் கட்டணம் கழித்துக் கொள்ளப்படும்.
இந்த பாஸ்டேக் முறை கடந்த 15-ம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இரண்டு வாரங்களை கடந்த நிலையில் இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை ஒரு கோடியே 15 லட்சம் பாஸ்டேக் வில்லைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வில்லைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பாஸ்டேக் வில்லைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
பாஸ்டேக் வில்லைகள் மூலம் நடந்த கட்டண பரிமாற்றங்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டி விட்டது. இதன் மூலம் ரூ.52 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது…