சென்னை:-
சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “இது மரணம் இல்லை கொலை” என்று பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்தாக கூறி சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரணம் தொடர்பாக பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள், திரைத்துறையினர், கிரிக்கெட் வீரர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பிரியா பவானி சங்கர் தனது காட்டமான கருத்தை பதிவு செய்துள்ளார்கள்:-
சாமானியர்களிடம் காட்டப்படும் அதிகாரத்தின் வீரியம், செல்வாக்கு நிறைந்த குற்றவாளிகளிடம் அடங்கிக்கிடகிறது. இது மரணம் இல்லை, கொலை. இடைநீக்கம், இடமாற்றம் இதற்கான தண்டனை இல்லை. அரசாங்கமும் சட்டமும் எடுக்கப்போகும் நடவடிக்கை ஒரு குடும்பத்திற்கு மட்டும் இல்லை ஒட்டு மொத்த சாமானியர்களுக்குமான பதில் என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.