கலாஷேத்ரா பாலியல் புகார் தொடர்பாக கல்லூரி மாணவிகள் கூறிய 4 பேராசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர்4 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் கூறியதாவது;
என்னை பற்றி புகார் கூறிய அனைத்து மாணவிகளிடமும் நான் சகஜமாக பழகினேன். நான் சகஜமாக பழகியதை தவறாக சித்தரித்து கூறுகின்றனர். மேலும், என்னை பற்றி புகார் கூறிய மாணவி வேறு காரணங்களுக்காக கல்லூரியை விட்டு வெளியேறியுள்ளார். அவரது குற்றச்சாட்டு உண்மையல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கலாஷேத்ரா பாலியல் புகார் தொடர்பாக கல்லூரி மாணவிகள் கூறிய 4 பேராசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.