தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரானா தொற்று அதிகரித்து வருவதை ஒட்டி கொரானாவை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி காய்கறி கடைகள் மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்றும் அதற்கு மேல் இயங்கு வதற்கு அனுமதி இல்லை என அறிவித்திருந்தது. மேலும் பால் குடிநீர் மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று அரசு அறிவித்த நேரத்திற்கு முன்பே கடைகள் அனைத்தும் வியாபாரிகள் தாமாக முன்வந்து அடைத்தனர். சேலத்தில் உள்ள மளிகை கடைகள் வர்த்தக நிறுவனங்கள் துணிக்கடைகள் மற்றும் பூ மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் சேலம் மாநகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சின்ன கடை வீதி மக்கள் நடமாட்டம் இல்லாத கடை வீதியாக மாறி உள்ளது இதேபோல் சேலம் மாநகரில் லீபஜார் செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கடைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.
கொரானாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும் மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.