பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்தக்கண்ணனின் திடீர் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
90களின் இறுதியில் ஆர்.ஜேவாக பணியாற்றிய ஆனந்தக்கண்ணன், பின்னர் சன் மியூசிக், SS மியூசிக் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி மத்தியில் பிரபலமானார்.
இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கும், தொகுத்து வழங்கும் பாணிக்கும் தனி ரசிகர் கூட்டம் உருவானது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இவருக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருந்தார்கள், தொடர்ந்து ‘சிந்துபாத்’, ‘விக்ரமாதித்யன்’ உள்ளிட்ட தொடர்களிலும், ‘சரோஜா’, ‘அதிசய உலகம்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
சன் டிவியில் பணியாற்றிய காலத்தில் விஜய், சூர்யா, அசின் என பல முன்னணி நட்சத்திரங்களை பேட்டி எடுத்துள்ளார்.
Bile Duct Cancer புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று (ஆகஸ்ட் 16) இரவு உயிரிழந்தார்.
இந்த செய்தியை இயக்குநரும், அவரது நெருங்கிய நண்பருமான வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டை பார்த்த கிரிக்கெட் வீரர் அஸ்வினோ, ஓமைகாட், எப்படி என்று கேட்டிருக்கிறார்.
சிங்கப்பூர் தமிழரான இவர் தனது மனைவி ராணியின் படிப்பிற்காக சென்னை வந்த பின்னர் தொகுப்பாளராக மாறினார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
பின்பு, தொலைக்காட்சியில் இருந்து விலகி ஆர்ஜே, பகுதி நேர விஜேவாகவும் பணிபுரிந்தார். பின்னர் 2011ம் ஆண்டு சிங்கப்பூரில் குடியேறிய அவர் அங்கிருந்த பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்தார். பிறகு டிஸ்கவரி தமிழில் ஒளிபரப்பான ‘சுவை’ எனும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மரண செய்தி அறிந்து ரசிகர்கள் பலரும் அவரது ஆரம்ப கால தொலைக்காட்சி பயணத்தில் தங்களது நினைவுகளையும் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.