சென்னை:-
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன்( 43). கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 15 நாட்களாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்காளகவே அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில், இன்று அதிகாலையில் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு சண்முகசுந்தரி என்ற மனைவியும், ஜீவா (13) என்ற மகனும் உள்ளனர். அவரது மனைவி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் ஆவடி திருமுல்லைவாயலில் வசித்து வருகிறார்கள்.
இச்சம்பவம் சக பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல் முருகனுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.