சென்னை
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
ஆக.13-ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர், செப். 21 அன்று நிறைவடைகிறது. பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடைபெறும் எனவும், அதைத் தொடர்ந்து துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட் வரும் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மறுநாள் ஆக. 14 அன்று வேளாண்மைத் துறைக்கென முதன்முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.