சென்னை:-
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணிவது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏழை, எளிய மக்களுக்கு முக கவசங்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கு முக கவசங்களை இலவசமாக வழங்க தமிழக அரசு தற்போது முடிவு செய்துள்ளது.
குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்கும் பொருட்டு, மொத்தம் 13.48 கோடி எண்ணிக்கையில் முக கவசங்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் இ.ஆ.ப வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா தொற்றை தவிர்ப்பதற்கு தமிழக அரசு அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் விலையில்லாத துணியிலான முககவசங்களை வாங்கி வழங்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினர்களை கொண்ட 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதை கணக்கிடும்போது, தலா ஒருவருக்கு 2 தரமான மறுபடியும் உபயோகிக்கத்தக்கதான 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 துணி முககவசங்கள் வாங்கப்பட வேண்டும்.
அவசர காலத்தில் பாதுகாப்பு உபகரணமாக இதை கொள்முதல் செய்யப்பட வேண்டி உள்ளது. எனவே அவசர கொள்முதலை மேற்கொள்ளலாம். இந்த கொள்முதலுக்கான விலைப்புள்ளியை மதிப்பிடுவதற்காக விலை நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்று அரசை வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தை பெறுவதில் வெற்றி பெறும் ஏலதாரருக்கு அதற்கான ஒப்பந்தத்தை அரசு வழங்கலாம் என்று கூறியுள்ளார்.
அவரது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு விலை நிர்ணயக் குழுவை அமைத்து அரசு உத்தரவிடுகிறது. இந்தக் குழுவின் தலைவராக வருவாய் நிர்வாக ஆணையர் செயல்படுவார். இயற்கை பேரிடர் மேலாண்மை இயக்குனர், பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் உள்பட 6 பேர் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள்.
மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய முகக்கவசத்தின் தரம் மற்றும் வகை பற்றி இந்த குழு முடிவு செய்யும். இதற்கான விலையை திருப்திகரமாக இந்தக் குழு நிர்ணயிக்க வேண்டும். ஒப்பந்த விலை மற்றும் ஏலத்தில் வெற்றி பெற்றவரை முடிவு செய்து அரசுக்கு தகுந்த பரிந்துரையை இந்தக் குழு வழங்க வேண்டும்.
முன்னதாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட்டுடன் அவர்களுக்கு தலா 2 முக கவசங்கள் வழங்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.