புல்தானா:-
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா (Buldhana) மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி (Lonar Crater Lake) திடீரென்று இளஞ் சிவப்பு நிறத்திற்கு மாறி உள்ளது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புல்தானா. புல்தானா நகரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது லோனார் ஏரி. இந்த லோனார் ஏரி 113 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி புல்தானா வனவிலங்குகள் சரணாலயம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் மொத்தம் 383 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்நிலையில் திடீரென ஏரி நீர் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறியது. இதுதொடர்பான புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் ஏரியின் நீர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேல்காட் புலிகள் சரணாலய கள இயக்குனர் மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வனத்துறை கன்சர்வேட்டர் (Additional principal chief conservator of forests (wildlife) and field director, Melghat Tiger Reserve) M.S.ரெட்டி கூறுகையில்:-
லோனார் ஏரி திடீரென்று இளஞ் சிவப்பு நிறத்திற்கு மாறிய காரணம் குறித்து அறிய ஏரியின் நீர் மாதிரிகள் NEERI-க்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும். எதனால் ஏரி இவ்வாறு இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறியது என்ற சரியான காரணம் தெரியவரும் என்றார்.
இது குறித்து மற்றொரு அதிகாரி நிதின் ககோட்கர் (Nitin Kakodkar, principal chief conservator of forest (wildlife), Maharashtra) கூறுகையில்:-
கடந்த ஆண்டும் இதே போல ஏரியின் நிறம் வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். ஆனால் கடந்த ஆண்டு தற்பொழுது உள்ள அளவிற்கு மாறவில்லை. இதற்கு நீரில் உள்ள ஆல்காக்கள் தான் காரணம். கோடை காலங்களில் நீர் வற்றியதால் நீரில் உப்புத் தன்மை அதிகரிக்கின்றது. நீரில் உள்ள ஆல்காக்கள் சூரிய ஒளி படுவதன் காரணமாக நீரின் நிறம் மாறுகிறது என்று தெரிவித்தார்.
லோனார் ஏரி 1823 ஆம் ஆண்டு J.E.அலெக்சாண்டர் என்பவரால் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னரே ஸ்கந்த புராணம் பத்ம புராணம் மற்றும் அயனி அக்பரி (Aaina-E-Akbari) ஆகியவற்றில் இந்த ஏரி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த மே 16-ம் தேதி நவிமும்பை பகுதியில் உள்ள தாலவே சதுப்பு நிலப் பகுதியில் (Talawe Wetlands) ஒரு பகுதி திடீரென இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.
தாலவே சதுப்பு நிலப்பகுதியில் நிறம் மாற்றம் ஏற்படுவதற்கு காரணம் சதுப்பு நில நீரில் இருந்த ஆல்கா அல்லது ஹலோபாக்டீரியா (HaloBacteria) தான் காரணம் என்று ஆய்வாளர்கள் மட்டும் நுண்ணுயிரியலாளர்கள் தெரிவித்தனர்.
பொதுவாக கோடைகாலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வற்ற ஆரம்பிக்கும். இதனால் நிலத்தின் உப்பு தன்மையை அதிகரிக்கும். அப்போது நீரில் உள்ள ஆல்காக்கள் மீது சூரிய ஒளி படும் பொழுது பீட்டா கரோட்டினை ஆல்காக்கள் வெளியேற்றும். இந்த பீட்டா கரோட்டின்கள் தான் நீரின் நிறமாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. இந்த பீட்டா கரோட்டின்கள் பொதுவாக கேரட், பப்பாளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிகம் இருக்கும்.