காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பி.டி.சி. காலனியில் ஜெயக்குமார் என்பவரது வீட்டில் கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்வதற்காக ராஜேஷ் (வயது 35) மற்றும் ஏழுமலை (வயது 35) ஆகியோர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய சில நிமிடங்களிலேயே இருவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளனர்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கொடுத்த தகவலின் படி உடனடியாக விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்புத்துறையினர் விஷ வாயு தாக்கிய இருவரையும் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து உயிரற்ற உடலாக மீட்டனர். இருவரது உடலும் தாம்பரத்தில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.