ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலை வெடித்ததில் அதில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்த வீடியோ வெளியாகியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் வடமேற்கு ஆப்பிரிக்க கடற்கரையையொட்டி அமைந்துள்ள கேனரி தீவுகளில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த தீவில் கடந்த 19 ஆம் தேதி, ரிக்டர் 4.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியது.
இதனால் கேனரி தீவு அருகே 3 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
எரிமலை வெடிப்பு காரணமாக தொடர்ந்து நெருப்புக் குழம்பு வெளியேறுவதால், பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுமையும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
இதனிடையே கேனரி தீவுகள் அமையப்பெற்றுள்ள டிஜாரபே எனப்படும் கடல் பகுதியில் நெருப்புக் குழம்பு கடலில் கலந்தது. ப்லாயா நூவே எனும் இடத்தில் செந்நிறத்தில் உள்ள எரிமலை குழம்பு கடலில் கலக்கும் இடத்தில் வெள்ளை நிற ஆவி மேகம் போன்று வெளியிடப்பட்டு வருகிறது.
முன்னதாக, எரிமலைக் குழம்பு கடலில் கலக்கும் போது ஆபத்தான வாயுக்கள் வெளியாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்ல மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் 2-வது முறையாக லா பால்மா எரிமலை வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.