நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக 125 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டன. பூங்கா ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளுக்குப் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தலால் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 6 மாதங்களாக மூடப்பட்டன. பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் மீண்டும் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், சுற்றுலாத் தலங்களை திறக்க அரசு அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், இன்று (23ம் தேதி) முதல் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை திறக்க அரசு அனுமதித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறைக்குச் சொந்தமான உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காக்கள், கோத்தகிரி நேரு பூங்கா, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டன.