லண்டன்:-
2019 ஆம் ஆண்டு மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாஷா முகர்ஜி (24) கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மீண்டும் தனது டாக்டர் பணியை தொடங்கி உள்ளார்.
இந்தியாவில் கொல்கத்தா நகரை பூர்வீகமாக கொண்டவர் பாஷா முக்கர்ஜி. இவரது சிறு வயதில் குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு மிஸ் இங்கிலாந்து (Miss England) போட்டியில் பங்குபெற்று பட்டம் வென்றார்.
இவர் கிழக்கு இங்கிலாந்தின் பாஸ்டன் நகரில் உள்ள பில்கிரிம் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். அழகி பட்டம் வென்ற பின்னர் தனது மருத்துவ பணியை விட்டுவிட்டு பல தொண்டு நிறுவனங்களுக்கு தூதுவராக பல்வேறு நாடுகளுக்கு சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
தற்பொழுது கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளில் இங்கிலாந்து ஒன்று. இங்கு நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் இவர் தான் ஏற்கனவே பணிபுரிந்த பில்கிரிம் மருத்துவமனையில் மீண்டும் பணியாற்ற முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து கூறிய பாஷா முகர்ஜி:-
தற்பொழுது நாடு மிகவும் மோசமான சூழலில் சிக்கி உள்ளது. இந்நிலையில் நான் இங்கிலாந்திற்கு உதவ முன் வராவிட்டால் மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்றதற்கே அர்த்தமற்றுப் போய்விடும். எனவே தான் மீண்டும் எனது மருத்துவ பணியை தொடர உள்ளேன் என்று கூறினார்.
ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டு தனது உடல்நிலை சீராக இருப்பது தெளிவுபடுத்திக் கொண்ட பின்னரே மீண்டும் மருத்துவமனையில் ஈடுபட உள்ளார்.