வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார விவாத நிகழ்ச்சி காணொளி முறையில் மாற்றப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்ததால், 2வது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலின்போது தங்களது கொள்கைகள், சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இரண்டு கட்சியின் வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும்.அதில் அதிபர் வேட்பாளர்கள் 3 முறையும், துணை அதிபர் வேட்பாளர்கள் 1 முறையும் விவாதம் நடத்த வேண்டும்.
அந்தவகையில் ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெற்ற முதல் விவாதத்தில் டிரம்ப்-ஜோ பிடன் ஆகியோர் மாறி மாறி குற்றம் சாட்டினர். காரசாரமாக நடைபெற்ற இந்த விவாதம் முடிந்த சில நாட்களில் டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், 4வது நாளிலேயே வெள்ளை மாளிகை திரும்பினார். கொரோனா குணமாகாமல் விரைவாக டிஸ்சார்ஜ் ஆனது குறித்து பல்வேறு சர்ச்சைக்கும், விமர்சனங்களும் எழுந்தன. இதனால் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள 2வது விவாதம் நடைபெறுமா???? என சந்தேகம் நீடித்தது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் கொரோனாவில் இருந்து மீளாத பட்சத்தில் விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை என ஜோ பிடன் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனையடுத்து, 2வது விவாதத்தை காணொலி முறையில் நடத்த விவாத ஆணையம் மாற்றியது. இதற்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப், “இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது,காணொளி விவாதத்தில் நான் பங்கேற்க மாட்டேன். பிடனை காப்பாற்றுவதற்காகவே விவாத ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது” என குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, வரும் 15ம் தேதி நடைபெறவிருந்த 2-வது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விவாத ஆணையம் அறிவித்ததையடுத்து, மேலும் 22ம் தேதி நடைபெறும் மூன்றாவது விவாதத்திற்கான ஏற்பாடுகள் மட்டும் தற்போது செய்யப்படுகின்றன.