வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த கொரோனா சிகிச்சை முடிவடைந்ததாகவும் இன்று முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்க இருக்கிறார் என்றும் வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வருகிற நவம்பர்-3-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதிபர் டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியா டிரம்புக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த மாதம் 1-ம் தேதி உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் டிரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே அலுவலக பணிகளை கவனித்து வந்த டிரம்ப், 4 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ந்தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
அதனைத் தொடர்ந்து தான் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை மீண்டும் தொடங்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், புளோரிடா மாகாணத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில் “நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். தேர்தல் பிரசாரத்தை தொடங்க தயாராக உள்ளேன். அதன்படி இன்று நான் பிரசாரத்தில் ஈடுபடுகிறேன்” என்று கூறியுள்ளார்.