காபூல்:
‛இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்,’ என தலிபான்கள் உறுதியளித்தனர்.
ஆப்கானிஸ்தானை கட்டுக்குள் கொண்டுவந்த தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்தனர்.
கடந்த காலத்தில் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன, கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
அதுபோன்று இந்தமுறையும் பெண்கள், சிறுமிகள் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறிவிடும் என உலக நாடுகள் கவலையில் உள்ளன.
ஆனால், தலிபான்கள் இந்தமுறை உலகிற்குத் தங்களை நவீன சிந்தனையுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புவதாகத் அறிவித்துள்ளனர்.
தலிபான் பயங்கரவாத அமைப்பின் நீண்டகால செய்தித்தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித் கூறியதாவது:
பெண்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றலாம், கல்வி கற்கலாம், வெளியே செல்லும்போது ஹிஜாப் அணிந்து செல்ல வேண்டும். பெண்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் காட்டப்படாது.
உலக நாடுகளில் முஸ்லிம் பெண்கள் பலவாறு நடத்தப்படுகிறார்கள். இந்த தேசத்திலேயே கிராமப்புறங்களில் கட்டுக்கோப்பான முஸ்லிம்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் பெண் ஒருவர் பிரதமராகவே வந்துவிட்டார், சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் செயல்படத் தடையில்லை.
ஆனால்,பத்திரிகையாளர்கள் தேசத்தின் கருத்துகளுக்கு விரோதமாக செயல்படக்கூடாது. கடந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பும் இல்லை. ஆனால், தலிபான்கள் வந்தபின், மீண்டும் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும்.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்கள் , சர்வதேச அமைப்புகள், உதவும் அமைப்புகள் முக்கியமானவை, அவற்றின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும்.
தலிபான்களின் துணைத் தலைவரும், நிறுவனர்களில் ஒருவரான அப்துல் கானி பராதர் ஆப்கானிஸ்தானுக்கு வந்துவிட்டார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.