இந்தியாவில் பிரபலமான சந்தனக்கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்துள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் வீரப்பன் . அதன்பிறகு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் வசித்து வந்தார். வீரப்பன்- முத்து லட்சுமி தம்பதியினருக்கு விஜயலட்சுமி, வித்யாராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். முத்துலட்சுமி மலைவாழ் மக்கள் இயக்கம் என்ற அமைப்பையும், கணவர் வீரப்பன் பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களாக வீரப்பனின் மகள்களில் ஒருவரான விஜயலட்சுமி, வி.சி.க கட்சியின் கொடியை பிடித்தவாறு வெளியான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் மற்றொரு மகளான வித்யா ராணி இன்று பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இவர் தற்போது வழக்கறிஞராக உள்ளார்.
பின்னர் வித்யா ராணி பேசும் போது, “மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் என் தந்தையின் எண்ணம். தவறான வழியை தேர்வு செய்தாலும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது தந்தையின் எண்ணமாக இருந்தது. மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்பதால் பாஜகவில் நான் இணைந்திருக்கிறேன்” என்றார்.