பெலகாவி:-
கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே மருத்துவமனையில் பணியாற்றும் தாயைப் பார்த்து விட்டு பிரிய மனமில்லாமல் அழும் குழந்தையின் வீடியோ பார்ப்பவரை கண்கலங்க வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே பால்கா கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தா கொரிகொப்பா (31). பெலகாவியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மூன்று வயதில் ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார்.
இவர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வருவதால் கடந்த இரண்டு வாரங்களாக வீட்டிற்கு செல்லவில்லை. இவர் நீண்ட நாட்களாக வீட்டுக்கு செல்லாததால் இவரது மகள் தாயை காண வேண்டும் என்று தினமும் அழுதுள்ளார்.
இதனால் இவரது தந்தை தனது மனைவி வேலை பார்த்து வரும் மருத்துவமனைக்கு மகளை அழைத்துச் சென்றார். இந்த தகவல் தெரிந்து சுகந்தாவும் மகளைக் காண மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார்.
கொரோனா வார்டில் வேலை பார்த்து வருவதால் குழந்தைக்கு அருகில் செல்லாமல் தூரத்திலேயே நின்றார் சுனந்தா. தாயைக் கண்டதும் குழந்தை அழ ஆரம்பித்தது, தனது தாய் வீட்டுக்கு வர சொல்லி அழைத்தது. தனது மகள் அழுவதைக் கண்ட சுகந்தாவும் அழ ஆரம்பித்தார். தாய்-மகளின் இந்த பாசப்போராட்டம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.
இதனிடையே கர்நாடக முதல்வர் எடியூரப்பா செவிலியர் சுனந்தாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்:-
நீங்கள், உங்கள் குழந்தையை கூட காணாமல் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் கடினமாக உழைத்து வருகிறீர்கள். உங்களது பாசப் போராட்டத்தை தொலைக்காட்சியில் கண்டேன், நிச்சயம் உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று கூறினார்.
இதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடியும் மராட்டிய மாநிலத்தில் உள்ள செவிலியர் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பாராட்டுகளையும், ஆசிகளையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இதற்கு முன்னரும் சீனாவில் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் தாய் மகள் மகள் இடையிலான பாசப்பிணைப்பு போராட்டம் அனைவரையும் கண்கலங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.