கொல்கத்தா:-
டெல்லியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவரது உடல், குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் மற்றொரு அவலம் அரங்கேறியுள்ளது.
தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுபவர்களின் உடல்களை கழுத்தில் கயிறைக்கட்டி இழுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெற்கு கொல்கத்தாவில் நகராட்சி சொந்தமான வேனுக்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த வேனிலிருந்து உடல்கள் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்டது.
அப்போது துர்நாற்றம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள் தகன வாயிலுக்கு பூட்டு போட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படுபவர்களின் உடல்களை ஊழியர் ஒருவர் கழுத்தில் கயிற்றை கட்டி தர, தர இழுத்துச் சென்று அமரர் வாகனத்தில் ஏற்றும் கொடுமையான காட்சியை, ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இவ்வாறாக 21 சடலங்களை மயானத்துக்கு கொண்டு செல்ல சவக்கிடங்கில் இருந்து உடல்களை கழுத்தில் கயிறைக்கட்டி தர தரவென இழுத்துச் சென்று அமரர் வாகனத்தில் ஏற்றும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்த அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இறந்த மனித உடல்களை எப்படி இழிவாக நடத்துவது மனிதகுலத்தை வெட்கப்படச் செய்கிறது என்று அவர் கூறினார். மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு மேற்கு வங்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உடல்கள் கொரோனா நோயாளிகளின் உடல்கள் அல்ல, மருத்துவமனை பிண அறையில் உரிமை கோரப்படாத / அடையாளம் காணப்படாத உடல்கள் என்று மேற்கு வங்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.