ஒட்டாவா:-
கறுப்பினத்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர் முழங்காலிட்டு தனது ஆதரவை தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் காவல் துறையினரின் பிடியில் இருந்த கருப்பினத்தவரான ஜாா்ஜ் பிளாய்டு உயிரிழந்தார்.
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதை கண்டித்து அந்நாடு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருப்பகுதியாக கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் No justice, No peace என்ற பெயரில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் எதிர்பாராத விதமாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். கறுப்பு நிற மாஸ்க் அணிந்து தனது பாதுகாவலர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில், 9 நிமிடங்கள் முழங்காலிட்டு மவுன அஞ்சலி செலுத்தினார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போராட்டக்காரர்கள் ஒன்று கூடவேண்டாம் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டேம் (Teresa Tam) எச்சரித்திருந்த நிலையில், பேரணியில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. கனடாவில் டொரன்டோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற பேரணி நடைபெற்றது.
பிரதமரின் இந்த செயல்பாடு போராட்டகாரர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மற்றொரு தரப்பினர் பிரதமர் தேவையில்லாமல் விளம்பரம் தேடி கொள்வதாக விமர்சித்து வருகின்றனர்.