பட்டுக்கோட்டை:-
91 வயதாகும் மருத்துவர் ஒருவர் தனக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் வணிகர்களிடம், மூன்று மாத வாடகை தர வேண்டாம் எனக் கூறியதால், வணிகர்கள் நெழிந்துள்ளனர். இதைத்தவிர முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணமும் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியத்தெருவில் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் மகப்பேறு மருத்துவர் கனகரத்தினம் பிள்ளை (91). இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன். மகன் சுவாமிநாதன் மற்றும் மருமகள் வர்ஷா ஆகியோரும் மருத்துவராக உள்ளனர்.
கனகரத்தினம் பிள்ளைக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த கடைகள் அனைத்தும் ஊரடங்கு காலத்தில் பூட்டப்பட்டிருந்தது.
ஊரடங்கால் வியபாரம் இல்லாத நிலையில், வியாபாரிகளால் எப்படி நமக்கு வாடகை தர முடியும் என்று நினைத்த கனகரத்தினம் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கும் நீங்கள் எனக்கு வாடகை தர வேண்டாம் என்று வியாபாரிகளிடம் தெரிவித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.
இந்த கடைகளில் ஒரு மாதம் 1.40 லட்ச ரூபாய் வாடகை வரும். 3 மாதங்களுக்கும் வாடகையான 4.20 லட்சத்தை வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இந்த மனிதநேய மருத்துவரை பட்டுக்கோட்டை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்வேறு தரப்பு மக்களும், வியாபாரிகளும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தன்னிடம் சிகிச்சைக்கு வரும் அனைவரிடமும் இன்று வரை 10 ரூபாய் மட்டுமே பீஸ் வாங்குகிறார்.
இந்தியா, சீனா போர் நடந்தபோது இந்திய அரசு போர் தளவாடங்கள் வாங்குவதற்கு போதுமான நிதி இல்லை. எனவே மக்கள் தங்களிடம் உள்ள பணம், நகை போன்றவற்றை அரசுக்கு கொடுத்து உதவுங்கள், 5 வருடம் கழித்து அவற்றைத் திருப்பி தந்துவிடுவதாக கூறிக் கேட்டுள்ளனர். அப்போது தன் மகள்களின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த 83 பவுன் தங்க நகையை மத்திய அரசிடம் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு அரசும் நகையைத் திருப்பிக் கொடுத்ததாக தனக்கு நெருக்கமானவர்களிடம் டாக்டர் கூறுவார். நாட்டையும் மக்களையும் நேசிக்கக் கூடியவராக இருந்துள்ளார் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்றனர்.