சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி, கடந்த மாதம் 13ம் தேதி மரணமடைந்ததையடுத்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வரும் நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.