அயோத்தி:-
இந்தியாவில் 30 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு இந்தியர்களின் 500 ஆண்டுகளாக பிரம்மாண்ட ராமர் கோயில் அயோத்தி நகரில் அமைய உள்ளது. இந்தக் கோயிலின் கட்டுமானம் வரும் 2023 ஆம் ஆண்டு முடிய உள்ளது எனினும் இன்று கோயிலுக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது.
அயோத்தி ராமர் கோவிலின் சிறப்புகள் என்ன:-
வால்மீகி இயற்றிய இராமாயணத்தின்படி அன்றைய ரகு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்ட கோசல நாட்டின் தலைநகரமான அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தது, 14 ஆண்டுகள் வனவாசம் சென்று தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியது, லங்கை வேந்தன் ராவணனை சம்ஹாரம் செய்து சீதாதேவியை மீட்டது, குடி மக்களுக்கு சிறப்பான ராம ராஜ்ஜியத்தை அளித்தது என்பன ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். (ராம ராஜ்ஜியத்தில் குடி மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், ராம ராஜ்ஜியம் எவ்வாறு செயல்பட்டது என்பது யாருக்கும் தெரியாது)
இந்துக்களின் தெய்வமாக வணங்கப்படும் ராமனுக்கு அயோத்தியில் கட்டப்பட உள்ள கோவிலின் மாதிரி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
1528 ஆம் ஆண்டு பாபரின் தளபதியான மீர்பாகி என்பவரால் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. இந்த மசூதி 1992 ஆம் ஆண்டு கரசேவகர்களால் இடித்து தள்ளப்பட்டது. தற்பொழுது இந்த இடத்தில் முன்பு ராமர் கோயில் இருந்தது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கான மசூதி கட்டிக் கொள்வதற்காக தனியே 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் மொத்தம் 67 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக இந்த ராமர் கோவில் அமையவுள்ளது.
நகரா (Nagara Style) என்ற கோவில் கட்டிடக் கலை பாணியில் ராமர்கோவில் கட்டப்பட உள்ளது. இதில் கோயில் 10 ஏக்கரிலும், மீதமுள்ள 57 ஏக்கர் கோயில் வளாகமாகவும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 161 அடி உயரம், மூன்று தளங்கள், ரங் மண்டபம், நிரித்திய மண்டபம், குடு மண்டபம் என 5 மண்டபங்கள், ஒரு கோபுரத்தை கொண்டதாக இக்கோயில் வடிவமைக்கப்பட உள்ளது. இதேபோன்று இந்தக் கோயிலில் அமையவுள்ள மொத்த தூண்களின் எண்ணிக்கை 360.
இரண்டு லட்சம் எண்ணிக்கையில் ஸ்ரீராம் என்ற நாமம் பொறிக்கப்பட்ட செங்கல்கள் கொண்டு கோயிலின் அடித்தளம் அமைய உள்ளது. அடித்தளத்தின் முதல் கட்டமாக இன்று மதியம் 12:15 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி 22 கிலோ வெள்ளியிலான செங்கல்களை பூமியில் கீழ் வைத்து பூமி பூஜை செய்ய உள்ளார்.
300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமருக்கு கோயில் கட்டப்பட உள்ளது. பிரபல கட்டட கலை நிபுணரான சந்திரகாந்த்பாய் சோம்புரா தான், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணியின் தலைமை கட்டட கலைஞராக செயல்படவுள்ளார்.
ராஜஸ்தானின் பன்ஷி (Banshi) மலையில் இருந்து கொண்டு வரப்படும் மலைக்கற்களை தவிர, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ள 2 லட்சம் கற்களும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன.
அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவுள்ள ராமர் கோயிலை முழுவதுமாக கட்டி முடிக்க குறைந்தப்பட்சம் மூன்றரை ஆண்டுகள் ஆகுமென இந்தக் கட்டுமான திட்டத்தின் தலைமை கட்டட கலைஞரான சந்திரகாந்த்பாய் சோம்புராவின் மகன் ஆசிஷ் சோம்புரா தெரிவித்துள்ளார்.