லண்டன்:-
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சேவையாற்றி வந்த பால்மர்ஸ்டன் என்ற பூனை (Feline) ஓய்வுபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலக நிரந்தரச் செயலாளர் சர் சைமன் மெக்டொனால்ட் வெளியிட்டுள்ள தகவலில்:-
வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்திற்குள் எலிகள் நுழையாமல் பார்த்துக்கொள்வது அதன் முக்கியப் பணியாக இருந்ததாகவும், ஆனால் தற்போது அது ஓய்வுபெறுவதால் லண்டனில் உள்ள வசிப்பிடத்தை விட்டு ஒரு கிராமப்புறத்திற்கு பூனை இடம் மாறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள Downing Street இல் வசித்துவரும் பூனை லேரி, பிரிட்டிஷ் நிதியமைச்சக அலுவலகத்தில் சேவையாற்றி வரும் பூனை கிளாட்ஸ்டோன் ஆகியவற்றின் பணிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்மர்ஸ்டன் என்ற பெயரானது பிரிட்டனில் இரண்டு முறை பிரதமராக இருந்த விஸ்கவுண்ட் பால்மர்ஸ்டன் (Viscount Palmerston)ன் நினைவாக இந்த பூனைக்கு சூட்டப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் எலிகளை பிடிக்கும் பணிக்காக இந்த பூனை பணியமர்த்தப்பட்டது. முன்னர், பால்மர்ஸ்டன் பூனை பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பூனை லேரியுடன் ஏற்பட்ட மோதலுக்காக செய்தித்தாள்களில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.