திருவனந்தபுரம்:-
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆலப்புழா, இடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடா கடலின் மத்தியப் பகுதியில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடற்கரைப் பகுதிகளில் குறைந்த தாழ்வழுத்த மண்டலம் உருவாகி உள்ளது.
இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த பகுதிகளில் கனமழை மற்றும் அதிக மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.
இதனிடையே முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.35 அடியாக உள்ளது இதன் அபாயமான அளவான 142 அடியை எட்டுவதற்கு இன்னும் சில அடிகளே உள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள தமிழகப் பகுதிகளுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கேரள தலைமைச் செயலாளர் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அணையின் நீர் மட்டம் 136 அடியை எட்டியவுடன் அணை நீர் திறக்கபடும் என்று கூறியுள்ளார்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை மற்றும் முல்லை பெரியாறு அணை உள்ளிட்ட இரு அணைகளும் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.