டெல்லி:
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து சட்டமாக மாறின.
இந்த வேளாண் சட்டங்களுக்கு, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.மேலும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு’ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இதேபோல் வேளாண் சட்டங்கள் செல்லாது,ஏற்கத்தகாதது என சில முக்கிய பிரமுகர்களும் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து, மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.இந்த வழக்குடன் சேர்த்து அய்யாக்கண்ணு வழக்கும் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.