அமெரிக்கா:
ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு இந்திய வேட்பாளர் விதிஷா மைத்ரா அதிக வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஐ.நா சபையின் 193 உறுப்பினர்கள் இணைந்து ஆலோசனைக் குழுவுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கின்றனர். தகுதி, அனுபவம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து இந்த குழுவின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விதிஷா மைத்ராவுக்கு 126 வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிய- பசிபிக் நாடுகள் சார்பாக இரண்டு பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தனர்.அதில் விதிஷா மைத்ரா அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் நீடிப்பார். வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அவர் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நாவில் உறுப்பினராக இருக்கும் நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதை இந்த நிகழ்வு காட்டுவதாக ஐ.நாவுக்கான இந்திய நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.