தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க.வினர் உட்பட மூன்று பேரைக் கைது செய்ததற்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹெரென் பால், பாபு என்கிற மைக் பாபு ஆகியோரை சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவ்விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், “இந்நிலையில், கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை. ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் கைதாகியிருக்கிறார். இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்குப் பாதையாக இருக்கவேண்டும். வேறெதற்காகவோ பயன்பட்டுவிடக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.