தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக கட்சி தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
அந்த வகையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக பாஜகவிற்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொகுதியும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுகவுடன் புதிய நீதி கட்சி கூட்டணி தொடர்பார்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம், முதல் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் என தெரிவித்தார். புதிய நீதிக் கட்சி சார்பில் ஐந்து தொகுதிகள் கேட்டுள்ளதாகவும், இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட தயார் என்றார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசியலில் சாணக்கியத்தனத்துடன் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.