இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. அதேசமயம் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் விதமாக மே 9 முதல் மே 10ஆம் தேதிவரை ‘ஜெருசலேம் தினம்’ என்ற பெயரில் இஸ்ரேல் கொண்டாடுவதாக இருந்தது. இதனையடுத்து இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதன்தொடர்ச்சியாக, பாலஸ்தீனத்தின் காஷா முனையை தன்னாட்சி உரிமை பெற்று ஆட்சி செய்துவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இந்தநிலையில், ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நேற்று (11.05.2021) நடத்திய வான்வெளி தாக்குதலில் இந்தியவர் ஒருவர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதி செய்துள்ள மத்திய அரசு கேரளாவைச் சேர்ந்த 31வயதான சௌமியா சந்தோஷ் என்பவர், ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் பலியானது கூறியுள்ளது.
இவர் இஸ்ரேல் நாட்டில் வயதானவர்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் வழக்கம் போல தன் பணியை முடித்துவிட்டு தனது கணவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது தாக்குதலில் சிக்கி சௌமியா சந்தோஷ் உயிரிழந்துள்ளார்.