ஜம்மு காஷ்மீரில் இணைய, மொபைல் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. காலவரையின்றி இணையதள சேவையை முடக்கக்கூடாது என்றும், இணையதள சேவை பெறுவது குடிமக்களின் அடிப்படை உரிமையாகும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அரசாணை பிறப்பித்தது. இதனை அமல்படுத்தும் நடவடிக்கையாக அம்மாநில அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.
மிக மிக அசாதாரண சூழ்நிலையில் தான் இணையதள சேவையை முடக்கலாம் என்றும், அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தில் இணையதள சேவை பெறும் உரிமையும் அடங்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளை 7 நாட்களுக்குள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இணையதள சேவையை காலவவரையின்றி முடக்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும், நியாயமான கருத்து சுதந்திரத்தை 144 தடை மூலம் ஒடுக்கக் கூடாது என்று காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.