பெங்களூரு:-
இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மன்னிப்புக்கோரியது கூகுள் நிறுவனம்.
கூகுள் தேடலில் (Google Search) இந்தியாவின் மோசமான மொழி எது என இன்று தேடுதலில் பதிவிட்டால் அது கன்னடம் மொழி என காட்டியது.
இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனால் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் கொதிப்பு அடைந்தனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டியதற்கு கன்னட மொழி வளர்ச்சி மந்திரி அரவிந்த் லிம்பவலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சமூகவலைதளங்களில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக கன்னட மக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்டதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்புக்கோரியுள்ளது. மேலும், கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடு தளத்தில் தவறாக வெளியான பதிவுகளையும் கூகுள் நீக்கியுள்ளது.