கோவை:-
13 மணிநேரம் தொடர்ந்து ஓவியம் வரைந்து கல்லூரி மாணவி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் உலியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா ரவி (வயது 21). கோவையில் உள்ள சங்கரா கல்லூரியில் எம்.பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார்.
மோனிஷாவுக்கு சிறு வயது முதலே ஓவியத்தில் அதீத ஆர்வம். தந்தை மற்றும் தாய் அளித்த ஊக்கம் காரணமாக பல்வேறு ஓவியப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிகளும் பெற்றுள்ளார்.
தொடர்ந்து, பல்வேறு உலகத் தலைவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் படங்களையும் வரைந்தார். இதனால் இவருடைய ஓவியத்திற்கு அங்கீகாரம் கிடைக்க தொடங்கியது.
பள்ளியில் படிக்கும்போதே மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகளை வென்ற மோனிஷா, இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டு சாதனையும் படைத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற உலக சாதனை போட்டியில் பங்கேற்ற மோனிஷா 6,057.92 சதுர அடி நீளமுள்ள பேப்பரில் தொடர்ந்து 13 மணி நேரம் ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் 12 மணி நேரம் தொடர்ந்து ஓவியம் வரைந்தது சாதனையாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது. மோனிஷாவின் இந்த சாதனையைப் பெற்றோர்கள், நண்பர்கள், பேராசிரியர்கள், உறவினர்கள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.