திருவனந்தபுரம்:-
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் (89) மாரடைப்பால் காலமானார்.
சந்தோஷ் சிவனின் தந்தை சிவன், திரையுலகில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றியவர்.
புகைப்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய சிவன் ‘செம்மீன்’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்குள் நுழைந்தார். கேரள சினிமாவின் பிரபல புகைப்படக் கலைஞராக அறியப்பட்ட சிவன் இதுவரை மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
மேலும், சிவன், மலையாளதில் அபயம், யாகம், கொச்சு கொச்சு மோகங்கள் உள்ளிட்ட படங்களையும், ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் சிவன் ஸ்டூடியோவை உருவாக்கினார். இவருக்கு மொத்தம் 6 குழந்தைகள் இதில், சந்தோஷ் சிவன், சங்கீத் சிவன், சஞ்சீவ் சிவன் ஆகிய மூவரும் திரையுலகில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
சிவனின் மறைவையடுத்து அவரது குடும்பத்துக்கு திரையுலகினர் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.