மதுரை:-
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 11 பேர் தேர்வாகியுள்ளனர். அதில், மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணியும் தேர்வாகியுள்ளார்.
டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவில் இருந்து பல்வேறு பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் தேர்வாகி வருகின்றனர்.
அந்த வகையில், மதுரையை சேர்ந்த 22 வயதான ரேவதி வீரமணி என்பவர் தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
400 மீட்டர்கள் மற்றும் ரிலே ஓட்டங்களில், பல தேசிய மற்றும் பல்கலைக்கழக சாதனைகளை முறியடித்து உள்ள இவர் ஒலிம்பிக்கில் 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.
கடந்த 4ம் தேதி நடந்த தகுதிச்சுற்றில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53.55 விநாடிகளில் கடந்து சாதித்ததை அடுத்து, ஒலிம்பிக்கிற்கு தேர்வானார். தற்போது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த ரேவதி 12ம் வகுப்பு படித்தபோது ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று திறம்பட ஓடியுள்ளார்.
ரேவதியின் திறமையை பார்த்த பயிற்சியாளர் கண்ணன், அடுத்தக்கட்ட போட்டிகளுக்கு தயார்படுத்தியுள்ளார். பின்னர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றார்.
‘ஷூ’ கூட இல்லாமல் வெறும் காலில் பயிற்சி பெற்ற ரேவதி, விளையாட்டு வீரர்களின் உச்ச கனவான ஒலிம்பிக்கில் தடம் பதிக்க உள்ளார்.
முன்னதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, வாள்வீச்சு போட்டிக்காக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.