தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்து வந்தது, நிதி பற்றாக்குறை காரணமாக முந்தைய அரசு, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தியது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது .
இந்நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த முயன்று வருகிறார் .
எனவே அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டதை மீண்டும் 58 ஆக மாற்றியமைப்பது குறித்து முதல்-அமைச்சர் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆட்சியில் ஓய்திய வயது 60 ஆக உயர்த்தப்பட்டதால் ஒய்வு பெற வேண்டிய ஊழியர்கள் 9 மாத காலமாக பணியில் தொடர்கின்றனர். எனவே அவர்களை மேலும் 3 மாதங்கள் மட்டுமே பணிபுரிய அனுமதித்து விட்டு அவர்களை ஓய்வுபெற வைக்கலாம் என ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிதி நெருக்கடியில் ஓய்வூதிய பலன்கள் உடனடியாக வழங்க சாத்தியமில்லை என்ற நிலையில், ஓய்வுபெறும் நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றிக்கொள்ளும் வகையில்
பத்திரங்களாக கொடுத்து விட்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று முதல்வர் ஆலோசனை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஓய்வு பெறும் வயது 58 ஆக மாற்றி அரசாணை வெளியிட்டு அதன் மூலம் ஏற்படும் காலியிடங்களில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுப்பது குறித்தும் பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இது குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.