புதுடில்லி:-
குழந்தைகளிடம் பெரியவர்களை போலவே ஆன்டிபாடிகள் அளவு உருவாக்கியுள்ளதால் முதலில் துவக்கப் பள்ளிகளை திறக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கருத்த தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க ஆயத்தமான நிலையில் கொரோனா 2வது அலை நாடு முழுவதும் பரவியது. இதனால் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இதனிடையே, 3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என தகவல்கள் வெளிவந்தநிலையில், குழந்தைகளை தாக்கும் என்பதற்கான எந்தவித சாத்தியக்கூறுகளும் இல்லை என மருத்துவ வல்லுநர்கள் மறுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா சுகாதார அமைச்சக கூட்டத்தில் பேசியதாவது,
பெரியவர்களை விட குழந்தைகள் மிகவும் திறம்பட வைரஸ் தொற்றுகளை கையாள முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 4வது தேசிய செரோ ஆய்வில், குழந்தைகளிடம் பெரியவர்களை போலவே ஆன்டிபாடிகள் அளவை உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
தற்போதைய சூழலில், முதலில் துவக்கப் பள்ளிகளை திறப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். பள்ளிகளில் உதவி பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும். சில ஐரோப்பிய நாடுகளில், துவக்கப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.