உத்தரப்பிரதேசம்:
உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் பஸ்கா கிராமத்தில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் (வயதுகள் முறையே 17, 12 மற்றும் 8) மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் 17 வயது நிரம்பிய மூத்த பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற இருவருக்கும் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் கோண்டா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், தப்பி ஓட முயற்சித்த ஆஷிஷை போலீசார் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், மூன்று சகோதரிகளில் மூத்த பெண்ணை ஆசிஷ் ஒரு தலையாக காதலித்ததாகவும், காதலை அந்தப் பெண் ஏற்காததால் ஆசிட் வீசியதும் தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக அம்மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.